Monday, May 14, 2018

தோல்வியை எதிர்கொள்ளும் மந்திரம்

தோல்வியை கண்டு பயந்து ஓடுவதை நிறுத்துங்கள்! தோல்வி, நமது வெற்றி பயணத்தை உறுதி செய்யும் மைல்கல். ஒவ்வொரு முறை தோல்வி அடையும் போதும், அது, நாம் வெற்றிக்கு பயணிக்க வேண்டிய தொலைவை சுட்டிக்காட்டுகிறது!

எந்த குழந்தையும் பிறந்தவுடன் அடி எடுத்து வைத்து நடந்து விடுவதில்லை. வெற்றியும் எடுத்தவுடன் மகுடம் போல் சூட்டிக் கொள்ள வாய்ப்பில்லை. வெற்றியாளர்கள் பலரும் பல தோல்விகளுக்கு பின்னே வெற்றி மகுடத்தை சூட்டி கொண்டுள்ளனர். கைநழுவி போகும் வெற்றியை பற்றியே யோசிக்கிறோம். கொஞ்சம் மாற்றி தோல்விகளை பற்றி சிந்தியுங்கள். வெற்றி நம் கைகளுக்கு எட்டும் தொலைவில் இருப்பதை உணர்வோம்!

தோல்விகள் கண்டு அஞ்சக்கூடாது. ஆனால் தோல்விகளை ஆராய வேண்டும். தோல்வி தரும் பாடத்தின் மூலம் புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். தோல்வி தரும் வலி நம்மை செதுக்குகிறது. ஆம்! உளியின் வலிக்குப் பயந்த கல் சிற்பமாவதில்லை! தொடர்ந்து நாம் நம்மை செதுக்கி கொள்ள கிடைத்த வாய்ப்பாக தோல்வியை கருத வேண்டும்.

வாழ்க்கை என்பது ஏற்றத்தாழ்வுகள் நிறைந்தது. ஒரு நாணயத்தை சுண்டி விடும் போது கிடைக்கும் பூ மற்றும் தலைக்கான வாய்ப்பாக வாழ்வில் வெற்றி, தோல்விகள் உள்ளன! நூறு தடவை சுண்டி விடும் போது வாய்ப்புகள் சமமாக இருக்கும்; அல்லது இரண்டிற்குமான வித்தியாசம் மிகச்சிறியதாகவே இருக்கும். தொடர்ந்து வெற்றிகள் கிடைக்கலாம் அல்லது தொடர்ந்து தோல்விகள் கிடைக்கலாம். ஆனால், அவற்றை எதிர் கொள்ள மனரீதியான பக்குவம் வேண்டும்.

உங்களுக்கு மனரீதியான திட தன்மையை தரும் மந்திரம் இதுதான் - ‘இதுவும் நம்மை கடந்து போகும்’. தோல்வி வரும் போது, இந்த தோல்வி நிலையானது அல்ல. இதுவும் கடந்து போகும். விரைவில் வெற்றி கிடைக்கும் என்று எண்ணுங்கள். தோல்வியை கண்டு துவண்டு போகாமல், உடனே வெற்றிக்கான முயற்சியில் இறங்குவீர்கள்.

அந்த முயற்சி விஞ்ஞான பூர்வமானதாக இருக்கும் பட்சத்தில் வெற்றி உறுதி செய்யப்படும். அதேவேளையில் வெற்றி களிப்பில் இருக்கும் போதும் இந்த சொல்லை பயன்படுத்துங்கள். இந்த வெற்றி நிலையில்லாதது என்று உங்களை நினைக்க செய்யும். வெற்றியினால் ஏற்படும் களிப்பு உடனே நிறுத்தப்பட்டு, அடுத்த புதிய முயற்சிகளுக்கு அடுத்தடுத்த உயர்வுக்கு உங்களை அழைத்து செல்லும்.

தோல்விகளை தைரியமாக எதிர்கொள்ளுங்கள்... இன்னல் தான் இனிமை தரும். வீழ்வது வீழ்ச்சி அல்ல. அது விதைத்தலுக்கே! ஒவ்வொரு முறை விழும் போதும் விதைக்கப்படுகின்றோம் என்று உறுதி கொள்ளுங்கள். சிறிதளவு நீர் விதையை வளர செய்துவிடும். அது போல் உங்களின் சிறிய முயற்சி விரிச்சமாக உங்களை உயர்த்தக்கூடும்! வெற்றிக்கனிகள், ‘தோல்வி’ என்ற விதையில் இருந்தே பெறப்படுகின்றன!

Sunday, May 13, 2018

மகிழ்வோடு இருங்கள்!

‘’மகிழ்ச்சி பொங்குகிற முகத்துடன் ஒருவர் வீட்டினுள் நுழைந்தால், உடனே அந்த வீட்டில் புதிய ஒளி தோன்றுகிறது.” -ஸ்டீவன்ஸன்

எப்பொழுதும் மகிழ்வோடு, சிரித்த முகத்தோடு இருங்கள். அது உங்களையும், உங்களை சுற்றி இருப்பவர்களையும் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவும். மனிதர்கள் இந்த உலகில் படைக்கப்பட்ட நோக்கமே மகிழ்ச்சியாக வாழ்வதற்காகத்தான். வாழ்க்கையின் வெற்றியும் அதிலேதான் இருக்கிறது. ஆனால், அதை நாம் உணருவதில்லை!

ஒரு சின்ன விஷயத்திற்கு கூட, முகத்தை ‘உம்’ என்று, வைத்துக் கொண்டு, அதையே நினைத்து கவலைப்பட்டுக் கொண்டு இருப்போம். அடுத்து வரக்கூடிய பெரிய வெற்றியைப் பற்றி நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

கவலைப்பட்டு நாம் முகத்தை கடினமாக வைத்துக் கொள்வதன் மூலம் நம்முடைய முகப்பொழிவும், நம்முடைய உடல் ஆரோக்கியமும் கெட்டுப் போகிறது. எனவே, கவலைகளை தூக்கி எரிந்து விட்டு மகிழ்ச்சியாக, சிரித்த முகத்தோடு இருக்கப் பழகுங்கள். அப்பொழுதுதான் நாம் ஆரோக்கியமாக இருக்க முடியும். பிறர் நம்மை நேசிக்கக்கூடிய சூழலும் உருவாகும்.

ஒரு பழமொழிகூட உண்டு; ‘வாய்விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்’. இது பழமொழி மட்டுமல்ல; வெற்றிக்கான மந்திரமும் தான்.

மனம் விட்டு பேசுவது எப்படியோ, அதேப்போன்று மனம் விட்டு சிரிப்பதன் மூலம் உடலில் உள்ள நோய்களும, மனதில் உள்ள பாரங்களும் இறங்கி, நாம் இயல்பான நிலைக்கு வருகிறோம். இதனால், நமது வாழ்க்கை இலகுவாக மாறுகிறது.

எங்களுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவர், அலுவலகத்தில் எப்பொழுதும் சிரித்த முகத்துடன், நகைச்சுவை உணர்வுடன், சுறு சுறுப்பாகவும், இளமையாகவும் வளம் வருவார். எதைப் பற்றியுமே கவலைப்பட மாட்டார். அவருக்கும் அலுவலகத்தில் வேலைப்பளு உண்டு; நெருக்குதல் உண்டு. ஆனாலும், அதையெல்லாம் ஈஸியாக சமாளித்து கஷ்டத்தில் இருப்பவர்களையும் சிரிக்க வைத்து விடும் அளவுக்கு திறன் பெற்றவர். அலுவலகத்தில் எல்லோருக்கும் அவரைப் பார்த்தாலே பொறாமையாக இருக்கும்.

ஒரு நாள் அவரிடம் இது தொடர்பாக கேட்டபோது, அவர் சொன்னார்; ‘இந்த உலகத்தில் நாம் வாழ்வதே சந்தோஷமாக இருக்கத்தான். இறைவனும் அதையே விரும்புகிறான். ஆனால், நாம்தான் வாழ்க்கையை கஷ்டமாக்கிக் கொண்டு, மகிழ்ச்சியின்றி இருக்கிறோம்.

கவலையிடம் நாம் தோல்வியடைவதை விட, கவலையை நாம் தோல்வியடையச் செய்ய வேண்டும். அதற்கு, சிறந்த மருந்து தான் மகிழ்வோடு, சிரித்த முகத்தோடு, நகைச்சுவை பண்போடு இருத்தல்,’ என்றார்.

நம்முடைய எண்ணங்கள் அழகாக இருப்பின், செயல்கள் அழகாக மாறும். செயல்கள் அழகாக மாறும்போது, நம்முடைய உள்ளத்தில் மகிழ்ச்சி ஏற்படும். மகிழ்ச்சி ஏற்படும்போது எல்லாமே அழகாக மாறும். எல்லாமே அழகாக மாறும்போது, நம் வாழ்வு நமக்கும், நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் பயனுள்ளதாய் மாறும்!

Wednesday, April 25, 2018


உலகே போற்றும் அபார வீரர்...

பெலெ (Pelé) என்றழைக்கப்படும் எடிசன் அரன்டெஸ் டொ நாசிமென்டோ (Edison Arantes do Nascimento): பிரேசில் நாட்டின் காற்பந்தாட்ட வீரர். காற்பந்தாட்ட உலகின் முடிசூடா மன்னனாக இன்றும் விளங்குபவர். காற்பந்தாட்டத்தை அமெரிக்காவில் பிரபலப் படுத்தியவர்; உலக அமைதிக்கான பரிசு பெற்றவர். 22 ஆண்டு காற்பந்தாட்ட அத்தியாயத்தில் மொத்தம் 1282 கோல்களைப் புகுத்தியவர் பெலே. ஹாட்ரிக் எனப்படும் ஒரே ஆட்டத்தில் தொடர்ந்து மூன்று கோல்கள் போடுவதிலும் உலகச் சாதனையை செய்திருக்கிறார்.அவர் கொடுத்த மொத்த ஹாட்ரிக்குகள் 92.
மூன்று முறை உலகக் கோப்பையை வென்ற ஒரே காற்பந்தாட்ட வீரர்.

காற்பந்தாட்ட உலகின் மிகச் சிறந்த வீரராகக் கருதப்படும் பெலெ 'கருப்பு முத்து' என்று இதழியலாளர்களால் அழைக்கப்படுகிறார்.

1940 ஆம் ஆண்டு அக்டோபர் 23 ஆம் தேதி பிரேசிலின் டிரெசு கோரகோயெசு (Tres Coracoes) என்ற பகுதியில் ஓர் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். தாமஸ் ஆல்வாஸ் எடிசனின் நினைவாக இவருக்கு எடிசன் என்ற பெயர் சூட்டப்பட்டது. இவரது செல்லப்பெயர்தான் பெலே ஆகும். அவரது தந்தை தொழில்முறையான காற்பந்தாட்ட வீரராக இருந்தவர். அவரது முழங்காலில் காயம் ஏற்படவே அவர் காற்பந்தாட்டத்தை விட வேண்டிய நிலை ஏற்பட்டது. பெலேவுக்கு நான்கு வயதானபோது அவரது குடும்பம் பவுரு (Bauru) என்ற பகுதிக்கு குடிபெயர்ந்தது. பெலேயும் அந்த வட்டாரத்தில் வசித்த சிறுவர்களும் காலுறையில் செய்தித்தாள்களையத் திணித்து ஒரு பந்துபோல் செய்து அதனைக்கொண்டு காற்பந்து விளையாடி மகிழ்வர். காலை முதல் மாலை வரை விளையாடுவார்கள்.

பெலேயின் தந்தையே அவருக்கு காற்பந்தாட்ட நுணுக்கங்களை கற்றுத்தந்தார். காற்பந்து ஆடாத நேரங்களில் பிறரது காலணிகளுக்கு பூச்சிடும் வேலை செய்தார் பெலே.
அவரது அபாரத்திறன் 1958 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண போட்டிகளில் பிரேசில் தேசியக் குழுவில் இடம்பெற்றுத் தந்தது. அந்த ஆண்டு இறுதிப்போட்டியில் ஸ்வீடனை 2:5 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி உலகக் கிண்ணத்தை முதன் முறையாக வென்றது பிரேசில். அந்த வெற்றிக்கு நடுநாயகமாக விளங்கியது பெலேயின் அபாரத்திறன்தான்உலகக் கிண்ணத்தை அவர் வென்றபோது அவருக்கு வயது பதினேழு.

திடல் முழுவதும் ஆட்டத்தை உணர்ந்து ஆடும் பாங்கு, கண கச்சிதமாக பந்தை தள்ளும் முறை, லாவகமாக இரண்டு மூன்று தற்காப்பு ஆட்டக்காரர்களை ஏமாற்றி முன்னேறும் திறன், தலையாலும், மார்பாலும், தொடையாலும் பந்தை கட்டுப்படுத்தும் மந்திரம், குறி தவறாமல் பந்தை வலை சேர்க்கும் தந்திரம் என இவற்றால் காற்பந்து ரசிகர்களை கிறங்கச் செய்தார் பெலே.

1970 ஆம் ஆண்டில் மெக்ஸிகோவில் நடைபெற்ற உலகக் கிண்ண இறுதியாட்டத்தில் அபரிமிதமான திறன் காட்டி 4:1 என்ற கோல் கணக்கில் இத்தாலியை வீழ்த்தி பிரேசில் மூன்றாவது முறையாக உலகக் கிண்ணத்தை பெற உதவினார் பெலே.

அந்த ஆட்டத்தில் அவர் தலையால் முட்டிப் போட்ட கோல்தான் மறக்க முடியாதது என்று ஒரு பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பெலே.

இருபதாம் நூற்றாண்டு முடிவதற்கு இருபது ஆண்டுகள் இருந்தபோதே பெலேவை அந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரராக அறிவித்தது அனைத்துலக ஒலிம்பிக் குழு.

என்றும் உலகம் மறக்காத ஆட்டக்காரர்...

வாசற்படி இல்லாமல் கட்டிய வீட்டுக்கு வேயப்பட்டாத கூரை.

விருந்தாளிகளாய் வருவோர் விருந்தாகும் வினோத வீடு.

சிலந்தி வீடு